Breaking News

தென்கொரியாவுடன் பேச, வடகொரியா இணக்கம்

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது.
இது குறித்து தென்கொரியா தெரிவிக்கையில் “தென்கொரியாவுடன் அடுத்த வாரம் பேசுவதற்கு வடகொரியா சம்மதித்துள்ளது” என்று கூறியுள்ளது.

இந்தச் சந்திப்பில் இரு தரப்பிலிருந்தும் 03 உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்த பேச்சுவார்த்தை எங்கு நடைபெறுகிறது என்றும், நடைபெறும் நாள் குறித்தும் அதிகாரப்பூர்வமாக தகவல் எவையும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் எழுந்தது. இதை தணிக்க தென்கொரிய அதிபர் மூன் ஜேஇன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.
அதன் பலனாக தென்கொரியாவில் அண்மையில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. இதன் தொடக்க விழாவில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் தங்கை கிம் யோ ஜோங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
குளிர்கால ஒலிம்பிக் தொடரில் வடகொரியா பங்கேற்றமை தொடக்கம், தென்கொரியா – வடகொரியா இடையே இணக்கம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.